நான் கூறும் மதுரை வரலாற்று தகவல்களை வேறு இடத்தில் தாங்கள் பயன் படுத்தும் பொழுது, 'தகவல்கள் மூலம் பிரபாகரன் கே.' என்று குறிப்பிடவும்.

திங்கள், 9 பிப்ரவரி, 2015

இன்று இருக்கும் மதுரை, அழித்து பின் புதிதாக நிறுவப்பட்டதோ அல்லது வேறு இடத்தில் இருந்து இங்கு நிறுவப்பட்டதோ அல்ல



மதுரையைப் பற்றி எழுதுவதற்கு முன், தோராயமாக மதுரை எப்பொழுது உருவாக்கப்பட்டது, அது தொடர்ந்து வாழும் நகரா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆரம்பகாலத்தில் இருந்த மதுரை இப்பொழுது இருக்கும் நகரிலிருந்து தென்கிழக்கே இருந்து இருக்கும் என்று திரு. V.கனகசபை (The Tamils Eighteen Hundred Years Ago by V.Kanakasabhai) கூறுகிறார். அவர் கூறும் பகுதி வண்டியூரைக் கடந்து சிறிது தூரத்தில் உள்ள பகுதி. வைகை நதி தன் வழித்தடத்தை மாற்றியதால் வடக்குக்கு பதில் இப்பொழுது அங்கு தெற்கே ஒடுவதாகக் கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகிறார் அந்த பழைய மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம், சங்க இலக்கியங்களில் கூறுவது போல் சரியாக மேற்கேயுள்ளது (தற்பொழுது மதுரையின் தென்மேற்கே அமைந்துள்ளது). சிலம்பில் கூறுவது போல் அந்த பழைய மதுரையை கண்ணகி தீயிட்டு அழித்துவிட்டதாக அவர் கூறுகிறார்.

சிலம்பின் வஞ்சின மாலை 41-53 கூறுகிறது, கண்ணகி தன் மார்பகத்தை திருகி, மூம்முறை வலதுபுறம் சுழற்றி தன் மார்பை ஏறிவதுப் போல் தன் கைகளை எறிந்தாள். இச்செயல் சபிக்கும் செயலாகும். தீ கடவுளாகிய அங்கி, குழந்தைகள், பிராமனர்கள், உத்தம பெண்கள் மற்றும் வயதானவர்களை தவிர்த்து மதுரையை அழிக்கட்டும் என்று அவள் கூறுகிறாள். இச்செயலும், கூற்றும் அவள் சபிக்கவே செய்தாள் என்பதை தெளிவுபடுத்துகிறது, அவள் மதுரையை தீயிடவில்லை என்பது உறுதியாகிறது.

மேலும் நான் ஏற்கனவே பதிவு செய்த Paln of Madura -1757, மதுரையைச் சுற்றி நதிகள் ஒடுவதும், கூடல் என்ற பெயருக்கு அதுவே காரணம் என்பதையும் பார்த்தோம். சங்க காலத்திலும் மதுரையை சுற்றி நீர் இருந்தது என்பதற்கு சிலப்பில் சான்றுள்ளது. சிலம்பு, புறஞ்சேரியிருந்த காதை 176-83 இதை உறுதிப்படுத்துகிறது. கவுந்திஅடிகள், கோவலன், கண்ணகியிடம், கடவுளும், தேவர்களும் வாழும் ஊர் மதுரை, ஆதலால் நாம் நகரை சுற்றி வந்து நகரினுள் போகலாம் என்று கூறுகிறர். அவர்கள் வடகரையில் ஒரு ஒடத்தில் ஏறி, தென்புறம் ஆள் அரவம் இல்லாத ஒரு படித்துறையில் இறங்கி, சிறிது தூரம் கிழக்கு பகுதியில் நடந்து மதுரையின் தலைவாயினுள்ளே (சுவாமி சன்னதி – பூக்கடை தெரு) போகின்றனர். அவர்கள் மதுரையின் வடப்புறம் உள்ள வைகையில் சென்று, மேற்கேயுள்ள கிருதுமால் நதியில் பயணித்து பின் தெற்கில் கிருதுமால் நதிக்கரையில் (தற்போதைய கீரைத்துறை பகுதியாக இருக்க வாய்ப்புள்ளது) அமைந்த ஒரு துறையில் இறங்கியதால், மதுரையின் மூன்று புறமும் நீர் இருந்ததை உறுதிப் படுத்துகிறது. நான்காவது திசையான கிழக்கில் (தற்சமயம் முனிச்சாலை, கீழவாசல் இன்று சாக்கடையாக ஒடும் கால்வாய்) நிச்சயம் அன்றே இப்பொழுது இருக்கும் கால்வாய் ஒடியிருக்கும். இது இன்றைய அமைப்போடு ஒத்து போகிறது. மேலும் இது கூடல் பெயர் காரணத்தையும் உறுதிப்படுத்திகிறது.

திருமுருகாற்றுப்படை மற்றும் சங்க இலக்கியங்களும், திருப்பரங்குன்றம் மதுரையின் மேற்கே உள்ளதாகக் கூறுகிறது. ஆனால் தற்சமயம் அது மதுரையின் தென்மேற்காக உள்ளது. மேலும் திருப்பரங்குன்றம் கி.பி.773ல் ஒரு குகை கோவிலாக கட்டப்பட்டுள்ளது. ஆனால் திருமுருகாற்றுப்படை 72-77 படி, திருப்பரங்குன்றம் ஒரு குன்றின் மேலும், அதன் அருகில் ஒரு சுனை உள்ளதாகவும், குன்றின் கிழ் ஒரு குளம் உள்ளதாகவும் கூறுகிறது. இன்று மதுரையின் சரியான மேற்கில் உள்ள சமணர் மலை மேல் ஒரு சுனையும், கீழ் ஒரு தாமரை குளமும் உள்ளது. இதுவே ஆரம்பத்தில் திருப்பரங்குன்றமாக இருந்து இருக்கும்.

களப்பிரர் காலத்தில் (கி.பி.200 – 600) சமணம் மதுரையின் முக்கிய சமயமாக இருந்தது. அப்பொழுது அது சமணர் மலையாக மாறி இருக்கலாம். பின் பாண்டியர்கள் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்திய பொழுது, அவர்கள் தற்பொழுதைய திருப்பரங்குன்றத்தை கட்டியிருக்கலாம்.

புதிதாக சமணர் மலையில் கண்டுப்பிடிக்கப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டை, 2013 ஜனவரியில், ‘Central Institute for Classical Tamil’  ஆய்வு செய்தார்கள். அதை கல்வெட்டு நிபுனர் திரு.ஜராவதம் மகாதேவன் அவர்கள் படித்து கூறியது – ‘பேருந்தேரூர் உழி தாதய் அயம்’. இதற்கு அர்த்தம் பேருந்தேரூரின் தாதய் அயம். தாதய் என்றால் மரியாதைக்கு உரியவர், ஊர் தலைவர், வயதானவர் என்று பொருள். அயம் என்றால் மலை மீதுள்ள சுனை என்று பொருள். பேருந்தேரூரின் பெரியவர் சீரமைத்த அல்லது வெட்டிய சுனை என்று பொருள் படுகிறது.

2 கருத்துகள்:

  1. திருப்பரங்குன்றமலை மீதும் காசி விஸ்வநாதர் கோயில் அருகில் சுனை ஒன்றும் உள்ளது. மேலும், திருப்பரங்குன்ற மலையைச் சுற்றி வருகின்ற வழியில் அமன்பாழி என்ற இடத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள் காட்டப்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் கூறுவது உண்மை. ஆனால் சங்க இலக்கியங்கள் யாவும் மதுரையின் மேற்கே திருப்பரங்குன்றம் உள்ளது என்பதாலும், முருகாற்றுப்படை கூறுவது போல் அதன் கீழ் ஒரு குளம் இருப்பதும், குன்றின் மேல் கோவில் உள்ளது என்ற தகவலும் சமனர் மலையே திருப்பரங்குன்றாக இருக்கும். மேலும் தற்சமயம் உள்ள கோவில் குடவரை கோவில், அது குன்றின் மேல் இல்லை.

      நீக்கு