நான் கூறும் மதுரை வரலாற்று தகவல்களை வேறு இடத்தில் தாங்கள் பயன் படுத்தும் பொழுது, 'தகவல்கள் மூலம் பிரபாகரன் கே.' என்று குறிப்பிடவும்.

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

மதுரையை யார் கட்டியிருப்பார்கள்? அல்லது வரலாறு தெரிந்து முதல் மன்னன் பெயர் என்ன?



இதற்கு நாம் அகம், புறம், மதுரை காஞ்சி மற்றும் மாங்குளம், அசோகர், காரவேல கல்வெட்டுகள் மற்றும் ‘சங்க கால மன்னர்களின் கால நிலை’ vol.I பத்மஜா ரமேஷ் & புருஷோத்தமன், இவைகளை ஒப்பு நோக்கவேண்டும். நாம் அகுதை யார்?, அவன் ஆண்ட கூடல் எது? மற்றும் பூதபாண்டியன் (இன்றும் நாகர்கோயில் அருகில் பூதபாண்டி என்று ஒரு ஊர் உண்டு), நெடுந்தேர் செழியன் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

கீழ் கண்டவற்றிற்கு ‘சங்க கால மன்னர்களின் கால நிலை’ மிகவும் உதவியாக இருந்தது. முதலில் அகுதையை எடுத்துக் கொள்வோம். புறம் 347, 5-7 அகுதை கூடலை ஆண்டதாகக் கூறுகிறது. புறம் 233, 2-4 அகுதை திகிரி (சக்கராயுதம்) வைத்திருந்தும் போரில் இறந்தான் என்று கூறுகிறது. அகம் 76, 2-3 அகுதை கள்ளோடு இருப்பான் என்றும், அகம் 113, 4-8 அவன் நாடு பழமையானது என்றும் கூறுகிறது. மேலும் அவன் நாடு எப்பொழுதும் பரபரப்பாக இருக்குமென்றும், கோசர்கள் (ரோமர்கள்) அவன் பாதுகாவலர்களாக இருந்தார்கள். அகம் 208, 5-9 & 15-18, கூறுகிறது, அவன் நண்பன் வெளியன் வேந்தன் ஆஅய் எயினன், மிஞிலியொடு போரில் இறந்ததால், அகுதை, மிஞிலியை பலிவாங்க அவனோடு போரிடுகிறான். இந்த ஜந்து பாடல்களில், புறம் 347 அகுதை, கூடலை ஆண்டான் என்றும் மற்ற பாடல்கள் அவன் படையின் வலிமையைப் பற்றியும், அவன் ஆண்ட கூடல் பழமையானது என்றும் கூறுகிறது.

நாம் அகுதை ஆண்ட கூடல் எங்கு உள்ளது என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். அகம் 296, 10-13, கொற்கை வேந்தன் நெடுந்தேர் செழியன் கூடலை கைப்பற்றியதாகக் கூறுகிறது. 2378 சங்க பாடல்களில் கூடல் என்ற பெயர் 28 பாடல்களில் வருகிறது. இந்த 28 பாடல்களில் 27 பாடல்களில் வழுதி கூடல், செழியன் கூடல், பாண்டியன் கூடல், பஞ்சவர் கூடல் என்று பாண்டிய மன்னர்களை குறித்தே கூறுகிறது. கபிலர் பாடிய புறம் 347 மட்டும் அகுதை கூடல் என்று கூறுகிறது. கொற்கை வேந்தன் பாண்டியன் நெடுந்தேர் செழியன் கூடலைக் கைப்பற்றியதாக அகம் 296 கூறுகிறது. அதன் பின் கூடல் பாண்டியர்களின் தலைநகராக மாறுகிறது. அதனாலேயே சங்க இலக்கியங்கள் பாண்டியர்களை கூடலோடு இணைத்துக் கூறுகிறது.

பாண்டியர்கள் கூடலை மதுரை (மதுரை காஞ்சி மற்றும் திருமுருகாற்றுப்படையில் மதுரை, கூடல் என்று இரு பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது – மதுரை காஞ்சி 429-430, திருமுருகாற்றூப்படை 70-71) என்று பெயர் மாற்றி அழைத்தனர். இது மதுரையின் மூலப் பெயர் கூடல் என்பது தெளிவாகிறது. கூடல் என்ற பெயர்க் காரணமான confluence of two or more rivers ம் பொருந்துகிறது.

2 கருத்துகள்:

  1. நான்கு வழிச்சாலைகள்
    நாலா பக்கமும் அழைத்தாலும்
    நாலாயிரம் சம்பளம் வாங்கி
    நாய்படாதபாடு பட்டாலும்
    நாலுமாசி வீதிகளுக்குள்ளே சுற்றித்திரியும்
    நான்மாடக்கூடல்காரன்
    நான்

    - சித்திரவீதிக்காரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை எவ்வளவு நவினங்கள் வந்தாலும், இந்த பழமை மதுரை ஒரு சுகமே.

      நீக்கு