நான் கூறும் மதுரை வரலாற்று தகவல்களை வேறு இடத்தில் தாங்கள் பயன் படுத்தும் பொழுது, 'தகவல்கள் மூலம் பிரபாகரன் கே.' என்று குறிப்பிடவும்.

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

மதுரையை யார் கட்டியிருப்பார்கள்? அல்லது வரலாறு தெரிந்து முதல் மன்னன் பெயர் என்ன?



இதற்கு நாம் அகம், புறம், மதுரை காஞ்சி மற்றும் மாங்குளம், அசோகர், காரவேல கல்வெட்டுகள் மற்றும் ‘சங்க கால மன்னர்களின் கால நிலை’ vol.I பத்மஜா ரமேஷ் & புருஷோத்தமன், இவைகளை ஒப்பு நோக்கவேண்டும். நாம் அகுதை யார்?, அவன் ஆண்ட கூடல் எது? மற்றும் பூதபாண்டியன் (இன்றும் நாகர்கோயில் அருகில் பூதபாண்டி என்று ஒரு ஊர் உண்டு), நெடுந்தேர் செழியன் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

கீழ் கண்டவற்றிற்கு ‘சங்க கால மன்னர்களின் கால நிலை’ மிகவும் உதவியாக இருந்தது. முதலில் அகுதையை எடுத்துக் கொள்வோம். புறம் 347, 5-7 அகுதை கூடலை ஆண்டதாகக் கூறுகிறது. புறம் 233, 2-4 அகுதை திகிரி (சக்கராயுதம்) வைத்திருந்தும் போரில் இறந்தான் என்று கூறுகிறது. அகம் 76, 2-3 அகுதை கள்ளோடு இருப்பான் என்றும், அகம் 113, 4-8 அவன் நாடு பழமையானது என்றும் கூறுகிறது. மேலும் அவன் நாடு எப்பொழுதும் பரபரப்பாக இருக்குமென்றும், கோசர்கள் (ரோமர்கள்) அவன் பாதுகாவலர்களாக இருந்தார்கள். அகம் 208, 5-9 & 15-18, கூறுகிறது, அவன் நண்பன் வெளியன் வேந்தன் ஆஅய் எயினன், மிஞிலியொடு போரில் இறந்ததால், அகுதை, மிஞிலியை பலிவாங்க அவனோடு போரிடுகிறான். இந்த ஜந்து பாடல்களில், புறம் 347 அகுதை, கூடலை ஆண்டான் என்றும் மற்ற பாடல்கள் அவன் படையின் வலிமையைப் பற்றியும், அவன் ஆண்ட கூடல் பழமையானது என்றும் கூறுகிறது.

நாம் அகுதை ஆண்ட கூடல் எங்கு உள்ளது என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். அகம் 296, 10-13, கொற்கை வேந்தன் நெடுந்தேர் செழியன் கூடலை கைப்பற்றியதாகக் கூறுகிறது. 2378 சங்க பாடல்களில் கூடல் என்ற பெயர் 28 பாடல்களில் வருகிறது. இந்த 28 பாடல்களில் 27 பாடல்களில் வழுதி கூடல், செழியன் கூடல், பாண்டியன் கூடல், பஞ்சவர் கூடல் என்று பாண்டிய மன்னர்களை குறித்தே கூறுகிறது. கபிலர் பாடிய புறம் 347 மட்டும் அகுதை கூடல் என்று கூறுகிறது. கொற்கை வேந்தன் பாண்டியன் நெடுந்தேர் செழியன் கூடலைக் கைப்பற்றியதாக அகம் 296 கூறுகிறது. அதன் பின் கூடல் பாண்டியர்களின் தலைநகராக மாறுகிறது. அதனாலேயே சங்க இலக்கியங்கள் பாண்டியர்களை கூடலோடு இணைத்துக் கூறுகிறது.

பாண்டியர்கள் கூடலை மதுரை (மதுரை காஞ்சி மற்றும் திருமுருகாற்றுப்படையில் மதுரை, கூடல் என்று இரு பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது – மதுரை காஞ்சி 429-430, திருமுருகாற்றூப்படை 70-71) என்று பெயர் மாற்றி அழைத்தனர். இது மதுரையின் மூலப் பெயர் கூடல் என்பது தெளிவாகிறது. கூடல் என்ற பெயர்க் காரணமான confluence of two or more rivers ம் பொருந்துகிறது.

திங்கள், 9 பிப்ரவரி, 2015

இன்று இருக்கும் மதுரை, அழித்து பின் புதிதாக நிறுவப்பட்டதோ அல்லது வேறு இடத்தில் இருந்து இங்கு நிறுவப்பட்டதோ அல்ல



மதுரையைப் பற்றி எழுதுவதற்கு முன், தோராயமாக மதுரை எப்பொழுது உருவாக்கப்பட்டது, அது தொடர்ந்து வாழும் நகரா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆரம்பகாலத்தில் இருந்த மதுரை இப்பொழுது இருக்கும் நகரிலிருந்து தென்கிழக்கே இருந்து இருக்கும் என்று திரு. V.கனகசபை (The Tamils Eighteen Hundred Years Ago by V.Kanakasabhai) கூறுகிறார். அவர் கூறும் பகுதி வண்டியூரைக் கடந்து சிறிது தூரத்தில் உள்ள பகுதி. வைகை நதி தன் வழித்தடத்தை மாற்றியதால் வடக்குக்கு பதில் இப்பொழுது அங்கு தெற்கே ஒடுவதாகக் கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகிறார் அந்த பழைய மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம், சங்க இலக்கியங்களில் கூறுவது போல் சரியாக மேற்கேயுள்ளது (தற்பொழுது மதுரையின் தென்மேற்கே அமைந்துள்ளது). சிலம்பில் கூறுவது போல் அந்த பழைய மதுரையை கண்ணகி தீயிட்டு அழித்துவிட்டதாக அவர் கூறுகிறார்.

சிலம்பின் வஞ்சின மாலை 41-53 கூறுகிறது, கண்ணகி தன் மார்பகத்தை திருகி, மூம்முறை வலதுபுறம் சுழற்றி தன் மார்பை ஏறிவதுப் போல் தன் கைகளை எறிந்தாள். இச்செயல் சபிக்கும் செயலாகும். தீ கடவுளாகிய அங்கி, குழந்தைகள், பிராமனர்கள், உத்தம பெண்கள் மற்றும் வயதானவர்களை தவிர்த்து மதுரையை அழிக்கட்டும் என்று அவள் கூறுகிறாள். இச்செயலும், கூற்றும் அவள் சபிக்கவே செய்தாள் என்பதை தெளிவுபடுத்துகிறது, அவள் மதுரையை தீயிடவில்லை என்பது உறுதியாகிறது.

மேலும் நான் ஏற்கனவே பதிவு செய்த Paln of Madura -1757, மதுரையைச் சுற்றி நதிகள் ஒடுவதும், கூடல் என்ற பெயருக்கு அதுவே காரணம் என்பதையும் பார்த்தோம். சங்க காலத்திலும் மதுரையை சுற்றி நீர் இருந்தது என்பதற்கு சிலப்பில் சான்றுள்ளது. சிலம்பு, புறஞ்சேரியிருந்த காதை 176-83 இதை உறுதிப்படுத்துகிறது. கவுந்திஅடிகள், கோவலன், கண்ணகியிடம், கடவுளும், தேவர்களும் வாழும் ஊர் மதுரை, ஆதலால் நாம் நகரை சுற்றி வந்து நகரினுள் போகலாம் என்று கூறுகிறர். அவர்கள் வடகரையில் ஒரு ஒடத்தில் ஏறி, தென்புறம் ஆள் அரவம் இல்லாத ஒரு படித்துறையில் இறங்கி, சிறிது தூரம் கிழக்கு பகுதியில் நடந்து மதுரையின் தலைவாயினுள்ளே (சுவாமி சன்னதி – பூக்கடை தெரு) போகின்றனர். அவர்கள் மதுரையின் வடப்புறம் உள்ள வைகையில் சென்று, மேற்கேயுள்ள கிருதுமால் நதியில் பயணித்து பின் தெற்கில் கிருதுமால் நதிக்கரையில் (தற்போதைய கீரைத்துறை பகுதியாக இருக்க வாய்ப்புள்ளது) அமைந்த ஒரு துறையில் இறங்கியதால், மதுரையின் மூன்று புறமும் நீர் இருந்ததை உறுதிப் படுத்துகிறது. நான்காவது திசையான கிழக்கில் (தற்சமயம் முனிச்சாலை, கீழவாசல் இன்று சாக்கடையாக ஒடும் கால்வாய்) நிச்சயம் அன்றே இப்பொழுது இருக்கும் கால்வாய் ஒடியிருக்கும். இது இன்றைய அமைப்போடு ஒத்து போகிறது. மேலும் இது கூடல் பெயர் காரணத்தையும் உறுதிப்படுத்திகிறது.

திருமுருகாற்றுப்படை மற்றும் சங்க இலக்கியங்களும், திருப்பரங்குன்றம் மதுரையின் மேற்கே உள்ளதாகக் கூறுகிறது. ஆனால் தற்சமயம் அது மதுரையின் தென்மேற்காக உள்ளது. மேலும் திருப்பரங்குன்றம் கி.பி.773ல் ஒரு குகை கோவிலாக கட்டப்பட்டுள்ளது. ஆனால் திருமுருகாற்றுப்படை 72-77 படி, திருப்பரங்குன்றம் ஒரு குன்றின் மேலும், அதன் அருகில் ஒரு சுனை உள்ளதாகவும், குன்றின் கிழ் ஒரு குளம் உள்ளதாகவும் கூறுகிறது. இன்று மதுரையின் சரியான மேற்கில் உள்ள சமணர் மலை மேல் ஒரு சுனையும், கீழ் ஒரு தாமரை குளமும் உள்ளது. இதுவே ஆரம்பத்தில் திருப்பரங்குன்றமாக இருந்து இருக்கும்.

களப்பிரர் காலத்தில் (கி.பி.200 – 600) சமணம் மதுரையின் முக்கிய சமயமாக இருந்தது. அப்பொழுது அது சமணர் மலையாக மாறி இருக்கலாம். பின் பாண்டியர்கள் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்திய பொழுது, அவர்கள் தற்பொழுதைய திருப்பரங்குன்றத்தை கட்டியிருக்கலாம்.

புதிதாக சமணர் மலையில் கண்டுப்பிடிக்கப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டை, 2013 ஜனவரியில், ‘Central Institute for Classical Tamil’  ஆய்வு செய்தார்கள். அதை கல்வெட்டு நிபுனர் திரு.ஜராவதம் மகாதேவன் அவர்கள் படித்து கூறியது – ‘பேருந்தேரூர் உழி தாதய் அயம்’. இதற்கு அர்த்தம் பேருந்தேரூரின் தாதய் அயம். தாதய் என்றால் மரியாதைக்கு உரியவர், ஊர் தலைவர், வயதானவர் என்று பொருள். அயம் என்றால் மலை மீதுள்ள சுனை என்று பொருள். பேருந்தேரூரின் பெரியவர் சீரமைத்த அல்லது வெட்டிய சுனை என்று பொருள் படுகிறது.

வியாழன், 5 பிப்ரவரி, 2015

மதுரை – சில செய்திகள்


1) கீழச்சித்திரை வீதியில், புதுமண்டபத்திற்கு எதிரில் உள்ள கிழக்கு கோபுர வாசலே கோவிலுக்கு நுழைவு வாயிலாக இருந்தது. 1700களில் கோவிலில் பணியாற்றிய ஒருவர் அக்கோபுரத்திலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்ததால் அவ்வாசல் பயன்பாடு குறைந்து, தற்பொழுது உள்ள அஷ்டலட்சுமி நுழைவு வாயில் பயன்படுத்தப்படுகிறது. இதுப்பற்றிய கல்வெட்டு கிழக்கு கோபுரத்தில் உள்ளது.

2) மதுரையை நான்மாட கூடல் என்று அழைப்பர். கூடல் ஏற்கனவே விளக்கம் கொடுத்துள்ளேன். மாடம் என்றால் வெளிசுற்று சுவரின் (compound wall) மேல் தெருவை பார்க்க அமைந்த இடம் (மதுரை காஞ்சி – நச்சினார்கினியார் உரை). Benhur (1959) ஆங்கிலப் படத்தில் ரோமானிய படையை வேடிக்கை பார்க்கும் காட்சியில் மாடத்தின் அமைப்பைப் பார்க்கலாம். நான்கு திசைகளிலும் மாடங்களுடன் கட்டிடங்கள் இருந்ததால் இப்படி அழைக்கப்பட்டது. (மாடம் ஓங்கிய மூதூர் - நெடுநல்வாடை 29, மாடம் பிறங்கிய மலிபுகழ்க்கூடல் – மதுரை காஞ்சி 429).

3) வீட்டின் நிலா முற்றத்தில் நீர் வந்து விழும் மகர வாயாக பருத்த வாயினையுடைய அம்பனம் (வீட்டின் கூடுவாய் மூலையிலமைந்த நீரை வீழ்த்தும் கருவி) – அதாவது drainage pipe – இது நெடுநல்வாடை 95-97

4) சுவர் செம்பினாலே செய்ததது போலும், மெல்லிய பூக்களையுடைய கொடியை வரைந்தும் இருக்கும் (நெடுநலவாடை 109-114)

5) வீடுகள் மண்டபம், கூடம், தாயக்கட்டு, அடுக்களை கொண்டதாக இருக்கும் – மதுரை காஞ்சி 357 – 361.

6) மதுரையின் தலைவானாக சிவன் – நீர், நிலம், தீ, காற்று, வானம் ஜந்தும் உடன் இயற்றிய மழுவாள் நெடியோன். தெய்த்தன்மையால் கூடிய முருகன் – இவர்களுக்கு உயர் பலி (ஆடு, கோழி) கொடுப்பதற்கு வாச்சியங்கள் ஒலிக்க (மதுரை காஞ்சி 453 – 460)

7) புத்த கோவில் – புறம் காக்குங் கடவுள் பள்ளியென்று அழைக்கப்பட்டது, அங்கு பெண்கள், குழந்தைகளை அழைத்துச் சென்றனர் – மதுரை காஞ்சி 466-467. சிவன் வழிபாட்டிற்கு அடுத்து, புத்த வழிபாடு இருந்துள்ளது.

8) வேதங்களை விளங்கும் படி பாடி, ஒழுக்கத்தோடு வாழும் பெரியோர் உறையும், குன்று குயின்றாற் போல் (கோபுரம்) இருக்கும் அந்தர் பள்ளி – மதுரை காஞ்சி 468-474

9) பூவும், புகையுடன் சாவகர் (சமனர்) வாழ்த்தி வணங்கும் இடம். இவ்விடம் செம்பால் செய்தது போல், செவந்த சுவர்கள்– மதுரை காஞ்சி 475-489

10) அறம் கூறும் அவை (நீதி மன்றம்) இருந்தது – மதுரை காஞ்சி 490-492

11) அமைச்சர்கள் கூடும் அவை இருந்தது – மதுரை காஞ்சி 493-499

12) மடிப்புடவைகள் சிறியதும், பெரியதுமாக, மெல்லியதாக இருந்தன - மதுரை காஞ்சி 519-522

13) restaurants – உணவகம் இருந்தது. அதில் இனிப்பு கடிகையும் (sancks), பால் சோறும், கண்டசக்கரை சோறும், கிழங்குகளும், புகழ்ச்சிகள் உண்டாகும் படி சமைத்த பெரிய இறைச்சிகளையுடைய சோறும் (பிரியாணி ?), இருந்தன – மதுரை காஞ்சி 532-535.
14) விலைமாதர் இருந்தனர், மயக்கி பணம் பறிக்கும் மாதர்கள் (call girls), இருந்தனர் – மதுரை காஞ்சி 559 – 583.

15) மாயோன் முருகன் பிறந்த நாளை ஒணம் என்று கொண்டாடினர் – மதுரை காஞ்சி 590 -619

16) சில கடிகைகள் – பாகில் சமைத்த மெல்லிய அடை, பருப்பு, தேங்காய், கண்டசக்கரை கூட்டி பிடித்த அப்பம் (கொழுக்கட்டை ?), இனிய பாகு கலந்த மாவு அப்பம் (கருப்பட்டி அப்பம்) – மதுரை காஞ்சி 620 – 651

17) மக்கள் தோல் செருப்பு அணிந்தனர் – மதுரை காஞ்சி 636

18) புடவைகளில் கஞ்சி இடப்பட்டது – மதுரை காஞ்சி 721

19) septic tank  இருந்து இருக்கலாம் – ‘கல்லிடித் தியற்றிய விட்டுவாய்க்கிடங்கினல் லெயி லுழ்ந்த செல்வர் தம்மின் கல் இடித்து இயற்றிய நாற்றமுடைய நீர் வாய் கிடங்கின் நல் மதில் இருந்த செல்வர்’ – மதுரை காஞ்சி 730

20) மடிப்புடவைகள் பருத்தி நூலிலும், எலிமயிரினாலும், பட்டுநூலினாலும் செய்யப்பட்டது – சிலம்பு 205-207


21) புடவைகள் ஒள்ளிய பூ வேலைப்பாடுடையதாக இருந்தது – மதுரை காஞ்சி 432-433