கீழடியின் காலம் கி.மு.200 என்று கார்பன் டேட்டிங் முடிவு கூறியுள்ளது. இதற்கு
பிழை விளிம்பு (margin of error) எவ்வளவு என்று தெரியவில்லை. சில முடிவுகளில் ± 500 வருடங்களும் சிலவற்றில் 200 வருடங்களும் உள்ளது. இது ஆய்வு செய்யும் பொருட்களைப்
பொருத்து அமையும்.
கொற்கையை ஆண்ட பாண்டியன் நெடுந்தேர் செழியன் அப்பொழுது மதுரையை ஆண்ட அகுதையுடன்
போரிட்டு வென்று மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய அரசை அமைத்து ஆண்டதாக
அகநானுறு 296 வரி 10-13 கூறுகிறது.
அகுதை பற்றி ஜந்து சங்க பாடல்கள் கூறுகிறது. புறம் 347 வரி 5-7 அகுதை கூடலை
ஆண்டதைக் கூறுகிறது. புறம் 233 வரி 2-4 அகுதை சக்கராயுதம் வைத்திருந்தும் போரில்
இறந்ததாகக் கூறுகிறது. இந்த போர் அநேகமாக நெடுந்தேர் செழியனுடன் ஆன போராக இருக்க
வேண்டும். அகம் 76 வரி 2-3 அகுதை கள்ளுடன் இருப்பதைக் கூறுகிறது. அகம் 113 வரி 4-8
கூடல் அகுதையின் ஆட்சியின் கீழ் இருக்கும்பொழுதே மூதூர் என்று அழைக்கப்பட்டது.
மேலும் அவன் கோட்டையை கோசர் பாதுகாத்தனர் என்றும், கூடல் எப்பொழுதும் மக்களின் ஆரவாரங்கள்
நிறைந்து காணப்பட்டது (பல்வேறு திசைகளில் – நாடுகளிலிருந்து வியாபாரத்திற்கு வரும்
மக்களால் உண்டான ஆரவாரம் – இதே நிலை மதுரை காஞ்சியிலும் கூறப்பட்டுள்ளது. மதுரை
காஞ்சி பாண்டியர்களின் ஆட்சி – கிமு 200 – அகுதை காலத்திலும் இதே நிலை என்பதால்,
பாண்டியர்கள் கைப்பற்றும் முன்பே மதுரை வியாபார நகரமாக இருந்துள்ளது என தெரிகிறது)
அகம் 208 வரி 5-9, 15-18, அகுதையின் நன்பன் வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்,
மிஞ்சிலியோடு செய்த போரில் இறந்ததாகவும் அதற்கு பழி தீர்க்க பெரும் படையையுடைய
அகுதை அவனோடு போரிட்டான் என்கிறது. .
இதில் நமக்கு தெளிவாவது, மதுரை அகுதை காலத்திலேயே மூதூர் அதாவது – 300. 500 ஆண்டு
காலம் பழமையான நகரம் என்று எடுத்துக் கொள்ளலாம். கூடல் அவன் காலத்திலேயே வியாபார
முக்கியத்துவம் வாய்ந்த நகராக இருந்திருக்கிறது. மேலும் அவன் கோட்டையைக் காக்கும்
படை வீர்ர்கள் கோசர்கள் என்பதைக் கொண்டு பார்க்கும் பொழுது அவனுக்கு ரோமர்கள்,
கிரேக்கர்களோடு தொடர்பு (அனேகமாக வியாபாரத் தொடர்பு) இருந்திருக்கிறது.
மதுரையைக் கைப்பற்றிய நெடுந்தேர் செழியன் காலம் கி.மு 325-300 என்று Dr.பத்மாஜா ரமேஷ் , V.R.புருஷோத்தமன் ‘சங்க கால மன்னர்களின் கால நிலை’ பகுதி 1 – (Pub. By International
Institute of Tamil Studies, Chennai) என்ற தங்கள் ஆய்வில் கூறியுள்ளார்கள். அவன் ஆண்ட கொற்கை ஒரு
சிறிய நாடு. அதற்கு அடுத்து வைகையைச் சுற்றிய வளமான ஊர்களை கொண்ட மையல் நாடு.
இதற்கு அடுத்து அகுதை ஆண்ட கூடல் (மதுரை). கொற்கையை ஆண்ட பூதப்பாண்டியனும்
(நெடுந்தேர் செழியனின் தந்தை) மையலை ஆண்ட மாவனும் நண்பர்கள். ஆதலால் நெடுந்தேர்
செழியன் தன்படையுடன் மையல் நாட்டு படையையும் சேர்த்து மதுரையைத்
தாக்கியிருக்கலாம்.
பாண்டியர்களின் போர்த்தாக்குதல்களில் உள்ள ஒரு தந்திரம், எதிரியை தாக்கும்
பொழுது எல்லைப் பகுதியில் உள்ள ஊர்களை அழிப்பதும் அதைச் சுற்றியுள்ள வயல்களின்
கதிர்களைக் கொள்ளையடிப்பதும் ஆகும். புறம் 57 வரி 5-11 ல் இதுபற்றிக்
கூறப்பட்டுள்ளது.
கீழடியில் கிடைத்த பொருட்களின் காலம் கி.மு.200 என்று கார்பன் டேட்டிங்
கூறுகிறது. பிழை விளிம்பு (margin of errors) 120 ஆண்டு என்றால் அது கொற்கை வேந்தன் நெடுந்தேர் செழியன்
மதுரை மீது படையெடுத்த சமயம். பாண்டியர்கள் தங்கள் போர் தந்திரப்படி மதுரை
எல்லையில் உள்ள கீழடியை அழித்து மதுரையை நோக்கி முன்னேறி போர் செய்திருக்கலாம்.